சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன் உட்பட 5 விரைவு ரயில்களில் தலா 2 பெட்டிகள் இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென்மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி (நெல்லை), நாகர்கோவில் (சிறப்பு ரயில்), கன்னியாகுமரி (கே.கே விரைவு ரயில்), மதுரை (பாண்டியன்),
செங்கோட்டை (பொதிகை) ஆகிய விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 200-ஐ தாண்டியுள்ளது. எனவே, தீபாவளியை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, முத்துநகர் ஆகிய 5 விரைவு ரயில்களில் தலா 2 முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.