தமிழ்நாட்டில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும் மத்திய அரசு தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், “உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதலமைச்சர் ஆராய்ந்தார்.
குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2% ஆர்டிபிசியார் பரிசோதனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
மேலும், 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கொரோனாவிற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. அதோடு கடந்து அலையின்போது தமிழக முதல்வர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். குழந்தைகளுக்கு என்றும் கூட பிரத்தியேகமாக படுக்கைகள் உள்ளது.
மேலும் ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை, தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96%, 2வது தவணை 92% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை, ஆங்காங்கே ஒவ்வொரு நாளும் 40, 50 பேர் மரணம் அடைந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக இழப்பு ஏதும் இல்லை.
மேலும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள், சமூக இடைவெளியை ஆகிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என கூறினார்.
மேலும் தடுப்பூசி கையிருப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும் மத்திய அரசு தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.