சென்னை திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (30). வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (செப். 20) காலை 11 மணியளவில் ஆட்டோவில் சவாரிக்காக, மெரினா, நேப்பியர் பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, நேப்பியர் பாலத்தில் கூட்டமாக நின்று சிலர் கூவம் ஆற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையும் பார்த்தனர்.
அப்போது மகேஷ், ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டுப் பார்த்தபோது, பெண் ஒருவர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்திருந்ததும், அவர் சேற்றில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கயிறு வழியாக,கூவம் ஆற்றில் இறங்கி சேற்றில் சிக்கித் தவித்த பெண்ணை மீட்டு, கயிறு கட்டி பாலத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
பின்னர், காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து மகேஷ் மற்றும் மீட்கப்பட்ட பெண் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், ஒரு வருடத்துக்கு முன், சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதும், இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளதும் தெரியவந்தது
இதையறிந்த, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்டு உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் மகேஷை நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும், ரூ.5 ஆயிரம் பண வெகுமதியும் அளித்தார்.