ஹாங்சோ: ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நாளை தொடங்குகிறது. இருப்பினும் கால்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகள் முன்னதாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடவருக்கான கால்பந்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்துடன் மோதியது.
இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 85-வது நிமிடத்தில் சுனில் ஷேத்ரி அடித்த கோல் காரணமாக இந்திய அணி முழுமையாக புள்ளியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் மியான்மருடன் மோதுகிறது.