எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை மாணவர்கள் உண்ண பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 11 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் காலை உணவு சமைத்து தருவதால், மாணவர்கள் உணவு உண்ண பெற்றோர் அனுமதிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வேண்டாம் மதிய உணவு மட்டும் போதும் என்று மாணவர்களின் பெற்றோர் தெரிவித்ததாகவும், பள்ளி மாணவர்களும் உணவு உண்ண மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்து பள்ளிக்கு வந்த கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் காலை உணவு திட்ட சமையலர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
மேலும், காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க மறுத்து வருவதாகவும், இந்தப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.